அண்மையச்செய்திகள்

Tuesday 2 January 2018

ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு கூட்டம் 31-12-2017 நடைபெற்றது - இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது



31.12.2017 அன்று திருச்செங்கோட்டில் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

ஆதித்தமிழர் பேரவை
மாநில பொதுக்குழு கூட்டம்.
""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் "மாநில பொதுக்குழு" கூட்டம் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் தலைமையில் 31.12.2017 திருச்செங்கோடு நாடார் மகாலில் பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய, மாநகர, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
""""""'''''''''''''''"
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
""""""""""""""""
தீர்மானம்.1
வீரவணக்க தீர்மானம்:-
""""""""""""""""
அருந்தததியர் மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட தோழர்கள் நீலவேந்தன், இராணி, மகேசுவரன், மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் வளர்ச்சிக்கு உழைத்த தோழர்களுக்கும் இக்கூட்டம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

தீர்மானம்.2
துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு தீர்மானம்:-
""""""""""""""""
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணிபுரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி நச்சுவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டிய மத்திய மாநில அரசுகள் கண்டும் காணாமலே இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி 1993 முதல் விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்களை கணக்கில் எடுத்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், இதுவரை நச்சு வாயு தாக்கி இறந்தவர்களின் புள்ளி விபரங்களை அரசே கணக்கெடுக்க வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துவதோடு,

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள் என அரசு அறிவித்திட வேண்டும். மேலும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்.2
அரசியல் அதிகாரப் பகிர்வு தீர்மானம்.
""""'"""'""'""""""""""""""""""'
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட அதாவது பட்டியலின மக்களில் மூன்றில் ஒரு பங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததால், கலைஞர் ஆட்சியில் 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கல்வியிலும், வேலையிலும் ஓரளவிற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

ஆனால் அரசியல் அதிகாரப் பங்கீட்டில் இதுவரை அருந்ததியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள 45 தனி சட்டப்பேரவை தொகுகளில், 44 தொகுதிகள் தாழ்த்தப்படோருக்கும், 1 தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தொகுதி மறுசீரமைப்பின் போது பெரும்பான்மையான தொகுதிகள் வட மற்றும் தென் மாவட்டங்களுக்குமே சென்றுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலிலும் பெரும்பான்மையான தனித் தொகுதிகளை பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும் மட்டுமே அனைத்து கட்சிகளும் ஒதுக்கி வருகிறது, இது சமூகநீதிக்கு எதிரானது என்று தெரிந்தும் ஒவ்வொரு கட்சிகளும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளது.

நியாயப்படி அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய மூன்றில் ஒரு பங்கான 15 தொகுதிகளையும் சேர்த்தே பறையர்களும், பள்ளர்களும் அனுபவித்து வருகின்றனர். இது அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்,

எனவே வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், ஒவ்வொரு கட்சியும் அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய 15 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்கிதர வேண்டும் என்று இந்த பொதுக்குழு அனைத்து கட்சிகளையும் வலியுறுத்துகிறது.

குறிப்பாக சமூக நீதியை போற்றி வளர்க்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இதில் முக்கிய கவனம் செலுத்தி, வர இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளை அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கவேண்டும், இதே போன்று ஆறு தனி நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை அனைத்து கட்சிகளும் அருந்ததியருக்கு ஒதுக்கி தரவேண்டும், என இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட இரண்டு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்த அரசுகளை வலியுறுத்தி இந்த ஆண்டு முழுவதும்! இழிவொழுப்பு, அதிகார மீட்பு ஆண்டாக ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் அமையும்.
__________________
தலைமைக்காக
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
31.12.2017.

No comments:

Post a Comment