அண்மையச்செய்திகள்

Thursday 21 December 2017

திராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பனிய சக்திகளால் பின்னப்பட்ட சதிவலைகளை அறுத்தெரிந்து தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது திமுக -- 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை

2 ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!
"""""""""""""""""""""""""
திராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பனிய சக்திகளால் பின்னப்பட்ட சதிவலைகளை அறுத்தெரிந்து தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது திமுக
""""""""""""""""""""""""""""""""
திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் சிதைக்க வேண்டும், என்ற தீய எண்ணத்தோடு, 2009 ஆம் ஆண்டு புனையப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தில்லி தனி நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளது, இந்த தீர்ப்பை எண்ணி சமூகநீதி மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,

இவ் வழக்கு பெரிய அளவில் ஊதிப் பெரிதாக்கி சித்தரிக்கப்பட்டவை. பொய்க் கணக்குகளை எல்லாம் உண்மை போலக் காட்டி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்து விளம்பரம் செய்து, திமுக மீது களங்கத்தை ஏற்படுத்த பார்பனிய சக்திகள் எவ்வளவோ முயன்றார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் கொள்கைகளை உள்வாங்கிய பார்பனிய எதிர்ப்பாளராகவும், பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும், சட்டம் படித்த அறிவாளியாகவும் விளங்கிய ஆ.ராசா வை.  தாழ்த்தப்பட்டனுக்கு இவ்வளவு அறிவாற்றலா என்ற ஆதிக்க எண்ணதோடும், கலைஞரின் குடுபத்தில் கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்டவர்களை இணைத்து தி.மு.க வை அழிக்க வேண்டும் என்பதற்காவே திட்டமிட்டு புனையப்பட்டது இவ் வழக்கு.

ஆனால் நிரூபிக்கத் தேவையான முகாந்திரம் இல்லாததால், இன்றைக்கு வழக்கிலிருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவருமே குற்றமற்றவர்கள் என தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இல்லாத ஒன்றைச் ஊதி பெரிதாக்கி, தனக்கு சாதகமான ஊடகங்கள் மூலம் பூதாகரப்படுத்தி, மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ச.க மோடி அரசு, பதவியேற்ற நாள் முதல் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, நீட், என்று மக்களை பல்வேறு நெருக்கடிகளில் தள்ளியதோடு, தமிழகத்தின் தன்னாட்சி உரிமைகளையும் பறித்து, ஆளுனர் அதிகாரத்தின் கீழ் தமிழகத்தில் மறைமுக ஆட்சியை நடத்துகிறது. எதிர்த்து நிற்க வேண்டிய அதிமுக வோ பா ச க வுக்கு பல்லக்கு தூக்குகிறது.

சமூக நீதியின் பிறப்பிடமான பெரியார் பிறந்த தமிழக மண்ணில், அறிஞர் அண்ணா தலைவர் கலைஞரால் பின்பற்றி வளர்க்கபடும் சமூகநீதிக் கோட்பாட்டை சிதைத்து, எப்படியும் தமிழகத்தில் கால் ஊன்றி விடலாம் என்று பா.ச.க மனப்பால் குடித்தது, அதற்கு சமூக நீதியை கட்டிக் காக்கும் உண்மையான திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று திமுக மீது புனையப்பட்ட பொய் வழக்கு இன்று பொடிப் பொடியாகிப் போனது.

இந்த தீர்ப்பு பார்பனிய சக்திகளுக்கும், துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கும் பெரிய சம்மட்டி அடி, இந்த அடி தொடரும் தளபதி மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி விரைவில் மலரும், அதற்காக ஆதித்தமிழர் பேரவை எப்போதும் துணை நிற்கும்.

இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
21.12.17

No comments:

Post a Comment